அரசின் முடிவைக் காதில் வாங்காமல் ஸ்டிரைக் நடத்துகிறார்கள்... அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக அரசின் முடிவைக் காதில் வாங்காமல் எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் சென்னையில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடத்தினர். அதில் சுமூக முடிவு கிடைக்க அரசு சில முடிவுகளைக் கூறியது என்றும் அதனை தொழிற்சங்கத்தினர் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறுகையில், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 7ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சில முடிவு எடுக்கப்பட்டது. அதனை தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மீண்டும் பின்னர் 8ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10 சங்கங்கள் கலந்துகொண்டன. அவர்கள்தான் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். 1250 கோடி ரூபாயை முதல் தவணையாக கொடுக்க அரசு ஒப்புதல் அளித்தது. முதல்வர் வாக்குறுதியளித்தும், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றால், அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று தெரிகிறது.
மொத்தமுள்ள 47 தொழிற்சங்கங்களில் 37 சங்கங்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றன. அதனால் அவர்கள் நடத்தும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வோம். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களை வைத்து மாநிலம் முழுக்க பேருந்துகளை இயக்க முடிவு எடுத்துள்ளோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications