வைகோவை திமுகவினர் தடுத்ததற்கு வருத்தம்.. ஸ்டாலின் அறிக்கைக்கும் வரவேற்பு: திருமாவளவன்
திமுக தலைவர் கருணாநிதியை பார்க்கச் சென்ற வைகோவை திரும்பி அனுப்பிய செயல் வருத்தமளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைக் காணச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுக தொண்டர்கள் திரும்பி அனுப்பிய செயல் வருத்தமளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை எதிர்த்து திமுக தொண்டர்கள் நடந்துகொண்ட முறை மிகவும் வருந்ததக்கதாகும்.
மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் உடல்நலிவுற்ற நிலையில் உள்ள ஒருவரை நலம் விசாரிப்பது மனிதநேயத்தின் அடிப்படையிலான ஒரு நாகரிக அணுகுமுறையாகும். அதனை அனுமதிப்பதும் வரவேற்பதும் நனிசிறந்த நாகரிமாகும்.
ஆனால் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒரு சில திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த வைகோ அவர்களை வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது திமுக தலைவர் கலைஞருக்கு உடன்பாடானதல்ல என்பதை நாமறிவோம்.
அவர் வழியில், திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களின் நடவடிக்கைகளை கண்டித்திருப்பதோடு தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இது மிகவும் போற்றுதலுக்குரியதாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.