மெரிட்டில் இடம்பெற்ற சரத்பிரபு தற்கொலை செய்ய வாய்ப்பில்லை... உறவினர்கள் சந்தேகம்!
டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் சரத்பிரபு இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திருப்பூர் : படிப்பில் படு சுட்டியான திருப்பூர் மாணவர் சரத்பிரபு மெரிட்டில் இடம் கிடைத்து டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து வந்ததாகவும், நேற்று இரவு கூட குடும்பத்தாருடன் தொலைபேசியில் நல்ல முறையில் உரையாடிய மாணவன் காலையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சரத்பிரபுவின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் சரத்பிரபு யூசிஎஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்எஸ் பயின்று வருகிறார். இன்று காலையில் மாணவர் சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கையில் இன்சுலின் போட்டுக்கொண்டு மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலைக்கு வாய்ப்பில்லை
ஆனால் சரத்பிரபு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. சரத்பிரபு இறந்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர்.
குடும்பத்தாரிடம் பேசிய சரத்பிரபு
சரத்பிரபுவின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. சரத்பிரபுவின் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெரிட்டில் இடம் கிடைத்து டெல்லி சென்று படிக்கும் சரத்பிரபு இரவு கூட குடும்பத்தாருடன் நல்ல முறையில் பேசியுள்ளார்.
இறந்ததாக காலையில் கூறுகின்றனர்
எப்போதும் போல நேற்று இரவு போனில் பேசிவிட்டு சாப்பிடச் செல்வதாக சொல்லிவிட்டு சரத்பிரபு இணைப்பை துண்டித்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் கழிவறையில் இறந்து கிடப்பதாக அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.
முன்னுக்குப் பின் முரண்
படுக்கையறையில் இறந்து கிடந்தார் என்றும் கழிவறையில் இறந்து கிடந்தார் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எனவே சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.