என் சீட்ல உட்காரும்மா.. குணம் அடைந்து திரும்பிய டானியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியாவை வியாழக்கிழமை அன்று தனது இருக்கையில் அமர வைத்து அழகுபார்த்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியா தம்பதியின் மூத்த மகள் டானியா. இவருக்கு 9 வயதாகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்
மூன்றரை வயதுக்கு பிறகு அவரது முகத்தில் வந்த ஒரு கட்டி அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு முகச்சிதைவு நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாளுக்கு நாள் டானியாவின் முகம் ஒரு பக்கம் சிதையத் தொடங்கியது
சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோருக்கு போதுமான பணவசதி இல்லை. இந்த நிலையில்தான் சிறுமி டானியா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது சிகிச்சை உதவ வேண்டும் என்றும் தான் பள்ளிக்கு சென்றாலும் அங்கு ஆசிரியர் தன்னை தனியாக உட்கார வைப்பதாகவும் குழந்தைகள் யாரும் தன்னுடன் விளையாட வருவதில்லை என்றும் அதனால் தான் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டதாகவும் டானியா வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவில் முதல்வர் தனது அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்போது அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.எம்.நாசருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை சிறுமியின் வீட்டுக்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன்படி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 கட்ட அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பினார். இச்சூழலில், டானியாவின் குடும்ப சூழ்நிலையை கருதி மருத்துவ செலவுக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தன் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை நேற்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டானியாவின் தாயாரிடம் கொடுத்தார்.
அப்போது, டானியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆட்சியர் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். சிறுமியின் விருப்பத்துக்கு இணங்க தன் இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார். இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.