திருவள்ளுவர் தினம்: திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படுமா?
சென்னை: உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர்.
அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தை இடம்பெறாதது இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்.
வள்ளுவர் பிறந்த இடம்
வள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
திருவள்ளுவர் கோவில்
வள்ளுவர் அவதரித்த இடம் என்று கூறப்படும் சென்னை மயிலாப்பூரில் வள்ளுவர், வாசுகிக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தன்று அரசு சார்பில் மாலை, மரியாதை அணிவிக்கப்பட்டு விழா நடைபெறுகிறது.
வள்ளுவர் ஆண்டு
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இன்றோடு 2045ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
வள்ளுவரின் மதம் எது?
வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் வள்ளுவரையே கடவுளாக பாவித்து கோவில் கட்டி வணங்கி வருகின்றனர் தமிழர்கள்.
தமிழக அரசு மரியாதை
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி ஜனவரி 16ம் நாள், சென்னையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அருவில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பா. வளர்மதி, வி. மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும், மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
133 இசைக்கலைஞர்கள் அஞ்சலி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மங்கல இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் புகழ்பாடும் வகையில்133 நாதஸ்வர வித்வான்களை கொண்டு இசை ஆராதனை நிகழ்ச்சி மயிலாப்பூரில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார்.
ஜி.கே. வாசன் கோரிக்கை
இசை ஆராதனையை தொடங்கி வைத்து பேசிய ஜி.கே.வாசன்,
இன, மொழிகளை கடந்த வாழ்வியல் நெறிகளை உலக மக்களுக்கு எடுத்து கூறுகிறது. எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்ததும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே. அதேபோன்று பிரகாசமான வாய்ப்பு அமையும்பட்சத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவேன் என்றார்.
ஆண்டு தோறும் இசைவிழா
இந்த விழா ஆண்டுதோறும் தொடர வேண்டும். இறைவனை இசையால்தான் உணர முடியும். மங்கல வாத்தியம் இல்லாமல் வீடுகளில் எந்த ஒரு சுபகாரியங்களும் நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட நாதஸ்வர இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.
கவிஞர் வைரமுத்து
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பேசிய அவர், புறவழியில் வருவதெல்லாம் இன்பம் அல்ல; அறவழியில் வருவது மட்டுமே இன்பம் என்று உலக நீதியை உரக்கச்சொல்கிறது திருக்குறள். எனவே இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அறிவிப்பு வெளியாகுமா?
உலகப் பொதுமறையாக போற்றப்படும் திருக்குறளை உலகிற்கு அளித்த வள்ளுவரை பெருமைப் படுத்தும் வகையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறுமா?