வாடி வாசல் முன்பு ஒப்பாரி.. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம்.. அங்காநல்லூரில் சோகம்!
மதுரை: ஜனவரி 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூருக்கு மறக்க முடியாத நாளாகும். மற்ற நாட்களை விட அந்த ஒரு நாள் மட்டும்தான் ஒட்டுமொத்த உலகின் கவனமும் அலங்காநல்லூர் பக்கம் குவிந்திருக்கும்.. காரணம்.. அன்று நடைபெறும் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு. அந்த வரலாற்றை கடந்த 2 வருடமாக இழந்து நிற்கிறார்கள் அலங்காநல்லூர் மக்கள்.
காளைகளின் பாய்ச்சலும், அதை அடக்க முயலும் காளையர்களி்ன் வீச்சும் இல்லாமல் கலங்கிப் போய் வாடிப் போய் வாடி வாசல் முன்பு சோகத்தோடு கூடியிருக்கிறது மக்கள் கூட்டம்.
பன்னெடுங்காலமாக நடந்து வரும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டுக்கு இப்படி ஒரு தடை வரும் என்று அலங்காநல்லூர் மக்கள் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. கடந்த வருடமும் அவர்களுக்கு சோக பொங்கலாக அமைந்தது. இந்த வருடமும் அப்படியே.
மாபெரும் பேரணி
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தினமான இன்று அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானாோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனைவரும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
பெண்களின் ஒப்பாரி
வாடிவாசல் முன்பு பெண்கள் கூடி குத்து விளக்கேற்றி வழிபட்டனர். பலர் அடக்க முடியாமல் கதறி அழுது ஒப்பாரி வைத்துப் பாட்டுப் பாடி சோகத்தை வெளிப்படுத்தினர்.
கருப்புக் கொடியுடன் பேரணி
ஜல்லிக்கட்டுத் திடல் வரைக்கும் கருப்புக் கொடியுடன் பேரணி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக் கொடியை ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் கலந்து கொண்டனர்.
வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு திடலை அடைந்ததும், வாடி வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவரும் தரையில் அமர்ந்து பீட்டாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பீட்டாவுக்குப் பாடை
கிட்டத்தட்ட 5000 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஊர்வலத்தில் பீட்டா அமைப்புக்கு பாடை தயாரித்து அதை அடக்கமும் செய்து மக்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.