சென்னையைத் தொடர்ந்து சிக்கலில் மாட்டியுள்ள மதுரை பி.டபுள்யூ.டி!
மதுரை: சென்னையை அடுத்து பணிகள் ஒதுக்கீடு செய்ய, லஞ்சம் பெறும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிடப் போவதாக மதுரை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி, மின் வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தாட்கோ உள்ளிட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் லஞ்ச அதிகாரிகளின் பட்டியலை விரைவில் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம்.
பொதுப்பணித்துறையில் கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறை என இரு பிரிவுகள் உண்டு. ஒப்பந்ததாரர்களுக்கான பணி ஒதுக்கீட்டை கமிஷன் அடிப்படையில் சிலர் பேசி முடிப்பது வழக்கம். பொதுப்பணித்துறையில் முன் எப்போதும் இல்லாத அளவு தலையீடுகள் தலை தூக்கியுள்ளதால், அதிகாரிகளில் சிலர் கேட்கும் அதிகபட்ச கமிஷன் தொகையை வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர்.
இதன் பாதிப்பு சென்னையில் அரங்கேறியது. "மாபெரும் ஊழல் செய்த முதல் பொறியாளர் யார்" என தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பேனர் வைக்கப்பட்டது.
அதிகாரி ஒருவரின் கமிஷன் தொடர்பான பேச்சும் வாட்ஸ்அப்பில் வெளியானது. சென்னையை போல் ஏனைய இடங்களிலும் பணிகள் ஒதுக்கீடு செய்ய 40 சதவீதம் வரை அதிகாரிகள் சிலர் கமிஷன் எதிர்பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்க கமிஷன். டெபாசிட் தொகையை திரும்ப வழங்க கமிஷன். போட்டி ஒப்பந்ததாரரை கவனிக்கும் வகையில் கமிஷன். அவ்வப்போது உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயரில் வசூலிக்கப்படும் நன்கொடை என எதற்கெடுத்தாலும் ஒப்பந்ததாரர்களின் தலையை மொட்டையடிக்கும் போக்கு அனைத்து துறைகளிலும் அதிகரித்துள்ளதாக பொதுவாக ஒப்பந்ததாரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மதுரையில் மாநகராட்சி, மின் வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தாட்கோ உள்ளிட்ட அனைத்து ஒப்பந்ததாரர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் லஞ்ச அதிகாரிகளின் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.