துளசி வாசம் மாறும்… தவசி வார்த்தை மாறாது… பிரேமலதா பஞ்ச்
நாகப்பட்டினம்: என் கணவர் கேப்டன் விஜயகாந்த் சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்... ‘துளசி கூட வாசம் மாறும் இந்த தவசியின் வார்த்தை மாறாது' என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மண்ணிப்பள்ளம் கிராமத்தில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரேமலதா, அதிமுக, திமுகவை போட்டு தாக்கினார்.
மக்களுக்கு பட்டை நாமம்
டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளம், ஆறுகளை சரியாக தூர்வாரவில்லை. இதனால் முறையாக தண்ணீர் பாயவில்லை. 110 விதியின் கீழ் சொன்ன அனைத்தையும நிறைவேற்றாமல் மக்களுக்கு ஜெயலலிதா 111 போட்டு விட்டார்.
அரசு கல்லூரி
குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றில் ரூ. 400 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தார். இதுவரை கட்டவில்லை.மணல்மேட்டில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என்றார். தற்போது கல்லூரி எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் திருமண கூடத்தில் இயங்கி வருகிறது.
புதிய பேருந்து நிலையம்
தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதுவரை அமைக்கவில்லை. 2006ல் ஆட்சி முடியும் போது மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட இடமே வாங்காமல் அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை கட்டப்படவில்லை.
விவசாயி தற்கொலை
மதுவை ஒழிக்கும் துணிவு ஜெயலலிதாவுக்கு இல்லை. தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை நலிந்து போய் உள்ளது. வெட்டுக்கூலி கூட வழங்கவில்லை. இந்த ஆலையால் பாதிக்கப்பட்டு விவசாயி மாப்படுகை முருகையன் தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு ஜெயலலிதா அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை.
பிரேமலதா பஞ்ச்
‘துளசி வாசம் மாறினாலும் மாறலாம் மக்களே இந்த தவசி தேர்தல் கூட்டணி விசயத்தில் வார்தைதை மாறமாட்டார்' என்றார் பிரேமலதா. விஜயகாந்த் நடித்து வெளிவந்த படம் ‘தவசி'. இந்த படத்தில் அடிக்கடி துளசி வாசம் பற்றி பஞ்ச் டயலாக் பேசுவார் விஜயகாந்த், அதே டயலாக்கை பேசி தொண்டர்களிடம் அப்ளாஸ் அள்ளினார் பிரேமலதா.