வெளிமாநிலத் தொழிலாளர்களின் கைரேகை அவசியம், முக்கியம், கட்டாயம்... போலீசார் உத்தரவு
சென்னை: வெளிமாநிலங்களில் குற்றச் செயல்களில் தேடப்படுபவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமைடைவதைத் தடுக்கும் வகையில், வெளிமாநிலத் தொழிலாளர்களின் கைரேகையைக் கட்டாயம் பெற வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு போலீசார் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேலை நிமித்தமாக சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் வருகின்றனர். கூடுதல் ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட நேரம் மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட வசதிகளை கேட்பதால் உள்ளூர் வேலையாட்களை விட அதிகளவில் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் குவாரிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப் படுகின்றனர்.
இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கென்றே கமிஷன் அடிப்படையில் பணியாற்றும் இடைத்தரகர்களும் உள்ளனர்.
குற்றச் செயல்களில் வெளிமாநிலத்தவர்:
இவ்வாறு அழைத்து வரப்படுகிறவர்களில் பலர், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காமலும் வேலை பிடிக்காமலும் கொஞ்ச நாளிலேயே சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். ஆனால், சிலரோ இங்கிருந்த படியே திருட்டு, வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் பல கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கொள்ளைகளில் வடமாநிலத்தவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், வெளிமாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டோர், போலீசுக்குப் பயந்து தொழிலாளிகளாக இங்கே வேலை செய்வதும் உண்டு. 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஓசூர் தொழிற்சாலை ஒன்றில் அசாம் மாநிலத்தில் தேடப்பட்ட பொடோ தீவிரவாதி சாதாரண தொழிலாளிபோல் வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளாக தமிழக சுற்றுலா மற்றும் தொழில் நகரங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், 75 சதவீத தொழிலாளர்களின் விவரம் இதுவரை கணக்கில் வந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களையும் விரைவில் கணக்கெடுப்பு பட்டியலில் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
இது தொடர்பாக திண்டுக்கல் எஸ்.பி. சரவணன் கூறுகையில், ‘‘வெளிமாநில தொழிலாளர்கள் அனைவர் மீதும் சந்தேகப்பட முடியாது. சிலர், குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தங்கள் மாநிலத்துக்கு தப்பிச் செல்கின்றனர். அதேபோல குற்றப்பின்னணி உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிலர், இங்கு வேலைபார்க்கின்றனர். இதனால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் முன்பு அவர்களது கைரேகையை பெறவேண்டும் என்றும், கைரேகை பெற்ற பிறகே வேலை வழங்கவும் தனியார் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.
உமா மகேஸ்வரி கொலை:
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் 5 பேரை, 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை வேளச்சேரியில் வைத்து போலீசார் சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருபவர்கள், அந்தத் தொழிலாளி குறித்த விவரங்களை தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. சில மாதங்கள் மட்டும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட இந்த உத்தரவுகள், பின்னர் வழக்கம்போல நீர்த்துப்போனது.
பின்னர், சிறுசேரியில் ஐடி நிறுவன பெண் பணியாளர் உமா மகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் இதில் தீவிரம் காட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள், அவர்களின் கைரேகையைக் கட்டாயம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள், அவர்கள் குறித்த தகவலை அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்காவிட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால், இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவரைகூட கைது செய்ததாக இதுவரை தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.