கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் பாதை சூப்பர்... சோதனையிட்ட பின்னர் ஆணையர் சதீஷ் தகவல்
சென்னை: கோயம்பேடு - ஆலந்தூர் இடையே நடந்து முடிந்துள்ள மெட்ரோ ரயில் பாதை முழு திருப்தியாக இருப்பதால் பாதுகாப்பு குறித்த ஆய்வு அறிக்கை வரும் 15 நாட்களுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது என்றும், ரயில் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் கூறினார்.
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 ஆவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவைக் கான பணிகள் நடந்து வருகிறது.
இதில் சுரங்கப்பாதையில் 19 ரயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 13 ரயில் நிலையங்கள் உள்பட 32 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மார்க்கத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ்நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் போக்குவரத்தை தொடங்குவதற்காக பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் தன்னுடைய குழுவினருடன் இணைந்து கடந்த 6 ஆம் தேதி முதல் கட்டமாக ஆய்வு செய்தார். அதற்கான 5 பக்க ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கும் ரயில்வே துறைக்கும் அனுப்பினார்.
தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் தன்னுடைய குழுவினருடன் கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை டிராலியில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் உடன் சென்றனர். தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் உள்பட 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணி அளவில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
பின்னர் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்கள் இயக்குவதற்கான கட்டுப்பாட்டு அறை ரயில்கள் நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் அலுவலகம் முழுவதும் பாதுகாப்பு குழுவினர் சுற்றி பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் கூறும் போது ‘‘கோயம்பேடு, ஆலந்தூர் மார்க்கத்தில் 2 கட்டமாக இறுதி கட்ட ஆய்வு செய்யப்பட்டு உள்ளது இதில் முதல் கட்டமாக பயணிகளுக்கான மெட்ரோ ரயில் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் தற்போது திருப்தி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து முதல் கட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2 ஆவது கட்ட ஆய்வு கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை டிராலியில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆணையர் குழுவில் இடம் பெற்றவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு வார காலம் அல்லது 15 நாட்களில் மத்திய அரசிடம் பாதுகாப்பு அறிக்கை வழங்கப்படும். அதற்கு பிறகு ரயில் இயக்குவது குறித்து மத்திய அரசு முறைப்படி விரைவில் அறிவிப்பு வெளியிடும்'' என்றார்.