தூத்துக்குடி துறைமுகத்தில் 2 போர்க் கப்பல்கள்... பயிற்சிக்காக வருகை.. மக்கள் பார்வையிட தடை!
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள இரண்டு பயிற்சி போர்க்கப்பல்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும், ரோந்து பணி பயிற்சியிலும் ஐஎன்எஸ்டிர், தரங்கினி, சுதர்ஷினி, சுஜாதா, கர்டூல், வர்ணா ஆகியவை கூட்டு ரோந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இரு கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து சென்றன.
இந்நிலையில், தற்போது டிர் மற்றும் வருண் ஆகிய இரு போர்க்கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன. இதில் ஐஎன்எஸ் டிர் கப்பல் 1986 முதல் கடற்படையில் இணைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 3200 டன் எடையும், 105 மீ்ட்டர் நிளமும், 4 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது.
இந்த கப்பல் மணிக்கு 16 கடல் மைல் தொலைவு வேகத்திற்கு பயணிக்க கூடியது. இதில் 20 அதிகாரிகளும், 120 வீரர்களும் பணியில் உள்ளனர். இந்த கப்பலில் துருவ், சேதக் ஆகிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு போர் ரக பீரங்கிகளும், ப்ளேர் எனப்படும் ராக்கெட் லாஞ்சர், நான்கு சுழலும் இயந்திர துப்பாக்கிகளும் கொண்டது. ரேடார் உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகளும் இதில் உள்ளது.
இதே கப்பலை போன்று வருண் 1998ல் கப்பல்படையில் சேர்க்கப்பட்டது. வெள்ளி விழா ஆண்டை நோக்கி பயணித்து வரும் இந்த போர் கப்பல் 1180 எடையும், 74.10 மீட்டர் நீளமும் கொண்டது. 3.2 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. 30 இன்ச் சிறிய பிரங்கிகள், 2 இயந்திர துப்பாக்கிகள், ரேடார் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்களை கொண்டது.
இதன் பின் பகுதியில் சேதக் இலகு ரக ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உள்ளது. இந்த இரு கப்பல்களும் கொச்சியில் இருந்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகவும், எரிபொருள் நிரப்பும் தேவைக்காகவும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன. இன்று மாலை இரு கப்பல்களும் புறப்பட்டு சென்னை வழியாக விசாகப்பட்டிணம் புறப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.