திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சங்கு புஷ்கர மேளா: ஆகஸ்ட் 2ல் கோலாகலம்
சென்னை: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் லட்ச தீப சங்குதீர்த்த புஷ்கரமேளா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 ஆண்டு களுக்கு ஒருமுறை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் லட்ச தீபம், சங்கு தீர்த்த புஷ்கர மேளா திருவிழா நடைபெறும். வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. தாழக்கோயிலில் பக்தவச்சலலேஸ்வரரும் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் ஆலயமும் உள்ளது. இந்த கோயில்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் 7ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.
நான்கு வேதங்களால் உருவான மலை மீது திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளதாக கூறுகிறது புராண கடை. இந்த மலையைச் சுற்றிலும் சிவ பெருமான், முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கு அருள் பாலித்து முக்தி அளிப்பதற்காகக் காட்சியளித்தபோது அகத்தீய குளம், மூலிகை குளம், அக்னி குளம், லட்சுமி தீர்த்தம், ரிஷப தீர்த்தம் மற்றும் சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 14 தீர்த்தக் குளங்கள் அமைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கன்னி ராசியில் குரு
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இன்றும் இயற்கையாகச் சங்கு பிறக்கும் உற்சவம் நிகழ்த்தப்படுகிறது. குரு பகவான் கன்னி ராசியில் நுழையும் நேரம் இந்த சங்கு புஷ்கரா மேளா நடத்தப்படுகிறது.
சங்கு புஷ்கர மேளா
இத்தகைய பிரசித்தி பெற்ற சங்கு தீர்த்தக்குளத்தில் வரும், ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி குரு பகவான் கன்னி ராசியில்இடப் பெயர்ச்சியாவதை யொட்டி, புஷ்கரணி மேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், உள்ளூர் வெளியூர் மற்றும் வடமாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவகலச பூஜை
வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், சங்குத் தீர்த்த புஷ்கரமேளாவும் லட்சதீபப் பெருவிழாவும் நடைபெறுகிறது. புஷ்கரமேளாவையொட்டி நவகலசாபிஷேக பூஜை நடைபெற்றது. கோயிலின் சங்குதீர்த்தக் குளத்தில் உள்ள ஸ்ரீஇரட்டை விநாயகர், ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரர், ஸ்ரீஅபய ஆஞ்ச நேயர் முதலான சந்நிதிகளில் ஹோமங்களும் நவகலச பூஜையும் நடந்தன!.
சங்கு தீர்த்த குளம்
சங்கு தீர்த்தக்குளம் வெகு பிரசித்தி பெற்றது. மலை கோயிலின் தெற்கே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சங்கு தீர்த்தக்குளத்தில் மார்க்கண்டேய முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்தபோது வழிபாடு செய்ய, இந்தக் குளத்தில் சங்கு பிறந்ததாக ஐதிகம்.
சங்கு பிறக்கும் ஆண்டு
நன்னீரில் சங்கு பிறப்பது அதிசயம். அதனாலேயே, இக்குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் எனப் பெயர் வந்ததாகப் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வேதமலையின் மீது பல அரியவகை மூலிகைகள் உள்ளன. மழை காலத்தில் மலையில் இருந்து வரும் நீர், கால்வாய்கள் மூலம் குளத்தில் சேகரமாகிறது.
இந்திரன் வழிபட்ட தலம்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவலாயங்களில் இது 261வது தேவாரத்தலமாகும். புராண கதைகளின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன், இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக சொல்லப்படுது. இதுக்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று கலசத்தை தாக்கி, அந்த துளை வழியா கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கழுகுகள்
வேதகிரீஸ்வரர் ஆலயத்தை இரண்டு வெள்ளை கழுகுகள் வட்டமிட்ட பிறகுதான் உணவே உட்கொள்கிறது. இந்த இரண்டு கழுகுகளும் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மதிய உணவு உண்ண திருக்கழுகுன்றம் வந்து உணவு சாப்பிட்டு, இரவு இராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்கிறது என்று ஸ்தல புராணம் சொல்கிறது.
குவியும் பக்தர்கள்
ஆகஸ்ட் 2ம் தேதி அன்றைய தினம், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று முக்கியமான விழாக்கள் நடைபெறுவதால், தமிழகத்தில் உள்ள ஆலயங்களிலும் புண்ணிய நதிக்கரைகளிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் கூடுதலாக, சங்கு பிறக்கும் விழாவும் லட்சதீபப் பெருவிழாவும் சேர்ந்து நடைபெறுகிறது.
சிறப்பு வசதிகள்
இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகள், கோயிலைச் சுற்றிலும் நடைபாதைகள், இலவச அன்னதானக் கூடங்கள், தண்ணீர்ப் பந்தல், அடிப்படை வசதிகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.