ஆளுநர் சொன்னதையே நம்பாமல் அப்பல்லோ போன திருமாவளவன், யார் சொன்னதும் நம்பியுள்ளார் பாருங்கள்!
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள 2வது வார்டு வரை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஜெயலலிதாவை நேரில் பார்த்து சந்திக்காமல் திரும்பியுள்ளதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது. இப்படித்தான் தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.
இரண்டாவது அறிக்கையில், அவர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது. அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கு ரிச்சர்ட் சொன்ன அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
என்ன பிரச்சினை
லண்டன் டாக்டர் வருகைக்கு பிறகுதான், அதிமுக தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. காய்ச்சலுக்கும், நீர்ச் சத்து குறைபாடுக்கும், இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்களே சிகிச்சையளித்துவிட முடியும். லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் ஏன் வரவழைக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி தொடர்ந்து பல பொதுமக்களால் முன் வைக்கப்படுகிறது.
ஆளுநர் விசிட்
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த சனிக்கிழமை, அப்பல்லோவுக்கு சென்று முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுவரை சென்றதாகவும், முதல்வர் உடல் நலம் தேறிவருவதாகவும் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் கேள்வி
ஆளுநர் தனது அறிக்கையில் முதல்வரை சந்தித்ததாகவோ, அவருடன் கலந்துரையாடியதாகவோ தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இத்தனைக்கும், காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றுக்காக அப்பல்லோவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய முதல்வரை, ஆளுநர் சந்திக்காமல் வந்தது ஏன் என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
[Read This: முதல்வரை சந்தித்தாரா அல்லது தூர நின்று பார்த்தாரா.. ஆளுநர் அறிக்கை கிளப்பும் சந்தேகங்கள்! ]
ஆவேச திருமா
இந்த நிலையில்தான், ஆளுநர் அறிக்கையை நம்ப மாட்டேன் என்று சொல்லி, அப்பல்லோவுக்கு , இன்று ஆவேசமாக கிளம்பி சென்றார் திருமாவளவன். வெளியே வந்ததும் அவர் அளித்த பேட்டியில், ஆளுநரின் அறிக்கையில் முதல்வர் விரைவாக குணமடைந்து வருகிறார் என்று இருந்தது. அதில் எனக்கு மனநிறைவு இல்லாத காரணத்தினால்தான் நேரில் சந்திக்கிற முயற்சியை எடுத்தேன். அதன் அடிப்படையில் இரண்டாவது தளத்திற்கு சென்றேன். அதிமுக மூத்த தலைவர்கள் என்னை வரவேற்றார்கள். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அம்மா அவர்கள் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தனர் என்றார்.
கெடுபிடி இல்லை, ஆனால் பார்க்கவில்லை
மேலும், அப்பல்லோ, 2வது தளத்தில் மற்ற பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் சிகிச்சை நடைபெறுகிறது என்றும், யாருக்கும் எந்த கெடுபிடியும் இல்லை என்றார் திருமாவளவன். உடனே பத்திரிகையாளர்களுக்கு பெருத்த ஆர்வம் ஏற்பட்டது. கெடுபிடி இல்லை என்றால், திருமாவளவன் எளிதாக முதல்வரை பார்த்து நலம் விசாரித்திருப்பார். இத்தோடு வதந்திகளை விரட்டிவிடலாம் என நினைத்த பத்திரிகையாளர்கள் ஆர்வமாக அடுத்த கேள்வியை கேட்டனர். "முதல்வரை நேரில் பார்த்தீர்களா?" என்பதுதான் அந்த கேள்வி.
மூத்த தலைவர்கள் யார்?
திருமாவளவன் அளித்த பதிலை பாருங்கள்: முதல்வரை நேரில் சந்திக்கவில்லை. அங்கு அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன். முதல்வர் நலமுடன் இருப்பதாக மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தனர். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். ஏன் சந்திக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது, அதுகுறித்து திருமாவளவன் பதிலளிக்கவில்லை. யார் அந்த அதிமுக மூத்த தலைவர்கள் என்ற கேள்விக்கும், பெயர் வேண்டாமே.. என கூறிவிட்டார். ஆளுநர் கூறியதை கேட்டு தமிழக மக்களில் பெரும்பாலானோர் எந்த சந்தேகமும் இன்றி முதல்வர் விரைவில் நலம் பெறுவார் என மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் ஆளுநர் கூறியதில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென மருத்துவமனைக்கு புறப்பட்டு போன திருமாவளவன், அதிமுக மூத்த தலைவர்கள் சொன்னதை கேட்டுவிட்டு திருப்தியோடு திரும்பியுள்ளார்.
ஆளுநர் சொன்னா சரியா இருக்கும்
அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான ஆளுநர் மீதே நம்பிக்கை இல்லாத, திருமாவளவனுக்கு, அதிமுக தலைவர்கள் மீது மட்டும் எப்படி நம்பிக்கை வந்தது என்பது மில்லியன் டாலர் கேள்வி. பேசாமல், ஆளுநர் கூறியதை நம்பியபடி வீட்டில் இருந்திருந்தால் காருக்கான டீசல் செலவு மிச்சமாகியிருக்குமே என்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள்.