பி.ஏன்னா பெனாங்கு அண்ணாமலைங்க, எம்.ஏன்னா மலேசியா அண்ணாமலைங்க.. அடடே மேயர்!
திருப்பூர்: பி.ஏ.ன்னா பினாங்கு அண்ணாமலை, எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை என திருப்பூர் மாநகராட்சி மேயர் தனது பெயருக்குப் பின்னால் போடும் டிகிரி குறித்து அளித்துள்ள அடேங்கப்பா விளக்கம். இந்த தகவல்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகி திருப்பூரையே கலக்கி வருகிறது. இதைக் கேட்டு அட்றா சக்க... அட்ற சக்க என்று பேசிக்கொள்கின்றனர் திருப்பூர்வாசிகள்.
டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள அமைச்சரவையில் போலி சர்ட்டிபிகேட் கொடுத்து அமைச்சரானவர் பதவி இழந்து சிறை சென்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நம் தமிழ்நாட்டிலோ அரசியல் தலைவர்கள் பலரும் அசால்டாக பி.ஏ., எம்.ஏ., என்று பதவியை போட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி மேயராக இருக்கும் விசாலாட்சி. இவர் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், பி.ஏ. படித்ததாக பொய் சொல்லி வேட்பாளரானதாகவும் இவர் மீது திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பா.சு.மணிவண்ணன் என்பவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனு ஒன்றை எழுதி இருந்தார்.
அதில், "திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பி.ஏ. படித்ததாக தங்களிடம் பொய் சொல்லி மேயர் வேட்பாளரானார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்கு கேட்ட அனைத்து விளம்பரங்களிலும் பி.ஏ. என்றுதான் குறிப்பிட்டார்.
மேயரான பின்னர் அனைத்து மாநகராட்சி பதிவுகளிலும் பி.ஏ. என்றுதான் குறிப்பிட்டார். விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு ஆகியவற்றிலும் பி.ஏ. என்றுதான் குறிப்பிட்டார்.
ஆனால், தனது வேட்பு மனுவில் திருப்பூர் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு வரை படித்ததாக தெரிவித்திருக்கிறார். எனவே, அம்மாவை ஏமாற்றி பொய் சொல்லி வேட்பாளராகி வெற்றி பெற்றுள்ள மேயர் விசாலாட்சியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரியும், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த புகார் குறித்து செய்தியாளர் ஒருவர், மேயர் விசாலாட்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதற்கு அவர் அளித்துள்ள பதில் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. 7ம் வகுப்பு படித்து விட்டு, பி.ஏ., எம்.ஏ. என நீங்கள் போட்டுக்கொள்வதாக புகார் வந்துள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மேயர் விசாலாட்சி,
"அது டிகிரி என யார் சொன்னது? அது இனிசியல். பி.ஏ. என்றால் பெனாங்கு அண்ணாமலை. பெனாங்குதான் எங்கள் பூர்வீகம். அப்பா பேரு அண்ணாமலை. அதன் பின்னர் இனிசியலில் எம் போட்டால் நன்றாக இருக்கும் என சொன்னதால் மலேசிய அண்ணாமலை என்பதை எம்.ஏ. என போடுறேன். இதை டிகிரின்னு நீங்களாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?" என எதிர்கேள்வி கேட்கிறார்.
இந்த விளக்கம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. அதைக் கேட்டு அட்ற சக்க...அட்ற சக்க என்று மெச்சுகிறார்கள் திருப்பூர்வாசிகள்.