மாணவிகளின் நகையைப் பறித்து எஸ்கேப் ஆன போலி ஆசிரியர் 6 ஆண்டுக்குப் பின் கைது!
திருப்பூர்: திருப்பூரில் மாணவிகளிடம் நகை மோசடி செய்த போலி ஆசிரியர் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாலசுப்பிரமணியம் என்பவர் ஆசிரியர் பணி கேட்டு விண்ணப்பத்தார்.

அவரது சான்றிதழை சரிபார்த்த பள்ளி முதல்வர், 12 ஆம் வகுப்பு பாடத்தை நடத்திக் காண்பிக்கும்படி அவரிடம் கூறியுள்ளார்.
அதன்படி, மறுநாள் பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்ற பாலசுப்பிரமணியன், பாடம் நடத்தும் போது இயற்பியல் ஆய்வுக்காக மூன்று மாணவிகள் அணிந்திருந்த நகையை தருமாறு கேட்டு வாங்கியுள்ளார்.
பின்னர், மதியம் வெளியே சென்றவர் பள்ளிக்கு திரும்பவில்லை. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காங்கயம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை சந்தேகத்தின் பேரில் காங்கயம் போலீஸார் திங்கள்கிழமை விசாரணை செய்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்துக்கு உள்பட்ட செபஸ்தியார்புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்கிற ஞானகருணாகரன் என்பதும், பிளஸ் 2 வரை படித்த அவர் போலி சான்றிதழ்களைக் கொண்டு ஆசிரியர் போல் நடித்து தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தற்போது பொள்ளாச்சி, புதுக்காலனி பகுதியில் உள்ள சுங்கத்தில் வாடகை வீட்டில் பாலசுப்பிரமணியன் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, பாலசுப்பிரமணியனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளியை கைது செய்த போலீசாரை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications