ஒரு கோடி ரூபாய் பண மோசடி - அமைச்சர் ஆனந்தன் மீது புகார் கொடுத்த பெண் அதிமுகவில் இருந்து நீக்கம்
திருப்பூர்: அதிமுகவில் பதவியும், அறநிலையத் துறையில் இருந்து நிலமும் வாங்கித் தருவதாகக்கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமைச்சர் ஆனந்தன் மீது போலீசில் புகார் அளித்த திருப்பூர் பெண் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.
திருப்பூர், காந்தி நகர், 'பிரைம் என்கிளேவ்'வில் வசித்து வரும் ஜெயமணி (38), கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பனியன் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் நான், அ.தி.மு.க., உறுப்பினர். தற்போது, வனத்துறை அமைச்சராக இருக்கும் ஆனந்தன், முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, சென்னையில் உள்ள கோவில் நிலத்தையும், கட்சியில் மகளிர் அணி பதவியும் எனக்குத்தருவதாகக்கூறி ஒரு கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துவிட்டார்.
பணத்தை திரும்பக் கேட்டபோது, என்னை மிரட்டி கட்சியின் உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்தார். எனது மகனை கடத்துவதாகவும், மகளை பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார். இது தொடர்பாக முதல்வருக்கும் புகார் அனுப்பியுள்ளேன்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி ராயபுரத்தில் என் தாயை 4 நபர்கள் மிரட்டிச் சென்றுள்ளனர். எனது குடும்பத்துக்கு ஆபத்து நேரிட்டால், அமைச்சர் ஆனந்தனே பொறுப்பு' என இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இவரது புகார் குறித்து, போலீஸ் கமிஷனர் சேஷசாய் கூறுகையில், ''பண மோசடி செய்ததாக, அமைச்சர் மீது புகார் கூறியுள்ளார். அதற்குரியஆதாரங்களை கேட்டுள்ளோம். ஆதாரம் இருப்பின் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
இந்நிலையில், அமைச்சர் மீது புகார் அளித்த ஜெயராணி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.