11 பேரை பலி வாங்கிய திருவள்ளூர் குடோன்... ஒரு பகுதியை இடிக்க கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர்: புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலியான தனியார் குடோனின் ஒரு பகுதியை இடிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் உப்பரபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கின் சுற்றுச்சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்ததில், அதன் அருகே வசித்து வந்த 11 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த தனியார் கிடங்கில் ஆய்வு நடத்தப்பட்டு, அபாயகரமான நிலையில் இருந்த 17 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
புறம்போக்கு...
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குடோன் 22 சென்ட் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இடிக்க உத்தரவு...
இதனையடுத்து, ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள கட்டடத்தை இடிக்குமாறு ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.
பொருட்கள் வெளியேற்றம்...
இந்த நடவடிக்கையை செயல்படுத்த ஏதுவாக அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை...
ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் அப்பகுதியை இடிக்காவிட்டால் மாவட்ட நிர்வாகமே இடிப்பு நடவடிக்கையை எடுக்கும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.