ஆர்.கே.நகரில் ஜெ.வை "போட்டியின்றி" தேர்வு செய்ய வேண்டும்: த.மா.கா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி. அதிரடி!
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இடைத்தேர்தல்களில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சில உயர்ந்த மரபுகளை பின்பற்றுவதே முறையாக இருக்கும்.
1981-ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வால்மீ வெற்றி பெற்றிருந்த அந்த தொகுதியை எம்.ஜி.ஆர். காங்கிரசுக்கே விட்டுக்கொடுத்தார். தனி அழைப்பு விடாத நிலையிலும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரமும் செய்தார்.
அதேபோல் ஆர்.கே.நகரில் ஒரு உயரிய மரபை ஏற்படுத்தும் வகையில் யாரும் போட்டியிடாமல் போட்டியின்றி தமிழக முதல்வரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்வதே விவேகம்.
இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கின்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது அரசியல் அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.