சட்டசபையில் சபரீசன் பற்றி பேசினார்கள், நான் சசிகலா பற்றி கேட்டேன்: ஸ்டாலின்
சென்னை: நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்து அதிமுக -எம்எல்ஏ பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்காமல் ஸ்டாலின் பேசியதை மட்டும்நீக்கியதால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக - எம்எல்ஏக்கள்கோஷமிட்டனர். அதனால் சபை காவலர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
என்னையும் என் குடும்பத்தினரையும் எப்படி பேசினாலும் அதை அனுமதிப்பது என்ற போக்கில் சட்டசபை நடைபெறுவதால் சட்டசபை நடவடிக்கைகளில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ மார்கண்டேயன், திமுக தற்போது சபரீசன்களால் வழி நடத்தப்படுகிறது என்று கூறினார்.
அப்போது சபையில் இல்லாத ஒருவரை பற்றி சபையில் பேசக்கூடாது; எனவே மார்க்கண்டேயன் பேசியதை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என்று திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
சசிகாலா யார்?
அவர்களை இருக்கைக்கு சென்று அமரும்படி கூறிய சபாநாயகர் தனபால் பின் ஸ்டாலின் பேச வாய்ப்பு வழங்கினார். அப்போது எழுந்த ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி குறித்து ஒரு விவகாரத்தைக் கிளப்பினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதை நீக்கினா அதையும் நீக்குங்க
இதையடுத்து ஸ்டாலின் பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து 'ஸ்டாலின் பேசியதை நீக்கினால் எம்எல்ஏ மார்கண்டேயன் பேசியதையும் நீக்க வேண்டும்' என திமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். அதற்கு 'மார்கண்டேயன் பேசியதை ஆய்வு செய்த பிறகு முடிவை சொல்கிறேன்' என சபாநாயகர் தெரிவித்தார்
முற்றுகை
'நீக்கினால் இருவர் பேசியதையும் நீக்குங்கள்; இல்லையெனில் இரண்டையும் நீக்க வேண்டாம்' எனக்கூறியபடி சபாநாயகர் இருக்கையை திமுக - எம்எல்ஏக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர்.
உத்தரவிட முடியாது
அப்போது சபாநாயகர் தனபால் நீங்கள் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றார். நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் எழுந்து, இவ்வாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடுவது நியாயம் இல்லை; அவரவர் இருக்கைக்கு செல்லுங்கள் என்று கூறினார்.
அமளி துமளி
சபையில் இல்லாதவர் குறித்து பேசியதை நீக்கினால் பிரச்னை தீர்ந்து விடும் என்று திமுகவின் துரைமுருகன் கூறினார். உடனே சபாநாயகர் தனபால் சபை குறிப்பை பார்த்த பிறகே முடிவு செய்ய முடியும் என்று கூறினார். அதை திமுகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டபடி, சிலர் சபையில் வைத்திருந்த ஏடுகளை துாக்கி வீசினர்.
ஸ்டாலின் பேச்சை நீக்கியது ஏன்?
இவ்வாறு அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சபாநாயகர் எச்சரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவைச் சேர்ந்த மார்கண்டேயன் பேசியதை நீக்காமல் ஸ்டாலின் பேசியதை மட்டும் ஏன் நீக்கினீர்கள்? என்று கேட்டனர்
கூண்டோடு வெளியேற்றம்
அதிமுக எம்எல்ஏ பேசியது சரியாக கேட்கவில்லை; ஸ்டாலின் பேசியது தெளிவாக கேட்டது; அதனால் நீக்கினேன் என்று சபாநாயகர் கூறவே, அதை திமுகவினர் ஏற்காமல் தொடர்ந்து 18 நிமிடங்கள் அமளியில் ஈடுபட்டனர் இதனையடுத்து திமுக எம்எல்ஏக்களை சபையில் இருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
மணி அடித்த ஜெ.அன்பழகன்:
ஆனாலும் திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து வெளியேற மறுத்தனர். தி.நகர் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சபாநாயரின் மேஜைக்கு அருகே வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மணியை அடித்தவாரே சபாநாயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை திமுக எம்எம்ஏ ஏ.வ.வேலு தடுத்தார். அவரையும் மீறி அன்பழகன் மிகக் கடுமையாக வாதிட்டார்.
குண்டு கட்டாக வெளியேற்றம்
இதையடுத்து சபைக் காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டபடி வெளியேறிய திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் திடீரென வேறொரு வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர் அப்போது சபைக் காவலர்கள் ஓடி வந்து மீண்டும் அவர்களை வெளியேற்றினர்
லாபியில் கோஷம்
உடனே சபாநாயகர் தனபால் 'அவர்களை லாபியில் இருந்தும் வெளியேற்றுங்கள்' என சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இருப்பினும் திமுக எம்எல்ஏக்கள் லாபியில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களை சிரமப்பட்டு சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
சசிகலா யார் என்று கேட்டேன்?
சபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வான அதிமுகவின் மார்க்கண்டேயன் என்னுடைய மருமகன் சபரீசன் பெயரைச் சொல்லி தேவையில்லாத வகையில் ஒரு வார்த்தையை பதிவு செய்தார். அப்படி பதிவு செய்தபோது திமுகவைச் சேர்ந்த நாங்கள் அதனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
மேலும் நான் எழுந்து, சபரீசன் என்னுடைய மருமகன்தான் - அதை ஒப்புக் கொள்கிறேன்; அதே நேரத்தில் ஜெயலலிதா வீட்டில் இருக்கக் கூடியவர் சசிகலா... அவரைப் பற்றி பேசினால் ஒப்புகொள்வீர்களா எனக் கேட்டேன். உடனே நான் பேசியதை சபை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார் என்றார்.
சட்டசபை புறக்கணிப்பு- கருணாநிதி
"என்னையும் என் குடும்பத்தினரையும் எப்படி பேசினாலும் அதை அனுமதிப்பது என்ற போக்கில் சட்டசபை நடைபெறுவதால் சட்டசபை நடவடிக்கைகளில் திமுக பங்கேற்காது" என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தான் இந்த ஆட்சியின் கடைசி கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.