தேர்தலில் மக்களின் மனநிலையை பொருத்தே கூட்டணியாம்: ஜி.கே. வாசன் வளவள கொழகொழ!
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று அடுத்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியின் திருமண விழாவிற்கு அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியின்போது அவர் கூறுகையில்,
இதுவரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மக்களின் மனநிலையை பொருத்தே அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் கூட்டணி இருக்கும்.
அரசு கல்வித் துறையினை கண்காணிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது போல் வேறு எங்கும் நடக்கக் கூடாது. இந்த நிலை வேறு எங்கும் ஏற்படக் கூடாது.
ஏழை எளிய மக்கள் பயிலும் இடங்களில் அதிகப்படியான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அவர்களுக்கு எந்த விதத்திலும் சுமை கொடுக்காத நிலையில் கல்லூரி
நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் எந்தவிதமான தவறும் இருக்கக் கூடாது என்பதே வாக்காளர்களின் விருப்பம். அதனை பூர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஜனநாயக நாட்டிலே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றார்.
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த கேள்விக்கு முதிர்ந்த அனுபவசாலியான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்றார்.
சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் பெரிய கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம் என்றார்.