மசோதா கிழிப்பு காகித களமான சட்டசபை - கடைசி நாளிலும் திமுகவினர் வெளிநடப்பு #tnassembly
சென்னை: தமிழக சட்டசபையில் பேரூராட்சி, நகராட்சித் தலைவர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் மசோதாவை கிழித்து எறிந்து விட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று சட்டசபை பேப்பர்களமாக மாறியதால் சபாநாயகர் தனபால் எதிர்கட்சி உறுப்பினர்களை வன்மையாக கண்டித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று 7 துறைகள் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட உறுப்பினர்கள் சட்டத்திருத்த மசோதாவை கிழித்து எறிந்தனர்.
தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.
மசோதவை கிழித்து எறிந்த காரணத்தால் அவை முழுவதும் காகிதங்களாக காட்சி அளித்தது. எதிர்கட்சியினர் செயலுக்கு சபாநாயகர் தனபால் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். உங்களின் செயல்பாடுகளை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து அவர் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
வெளிநடப்பு செய்த பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டசபையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் இன்று சிறுவாணி பிரச்சனை குறித்து நான் பேசியது நீக்கப்பட்டது எனவும் ஸ்டாலின் கூறினார். முன்னாள் தலைமை செயலாளர் நீக்கம் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 36 நாட்களாக அமளி துமளியுடன் நடத்த சட்டசபை கடைசி நாளான இன்று மசோதாக்கள் கிழித்து எறியப்பட்டதால் காகிதசபையாக மாறி காட்சியளித்தது.