தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா! பிற அதிகாரிகளுக்கு முன்மாதிரி!!
பெண் ஐஏஎஸ் அதிகாரி லலிதா தன்னுடைய ஒரே மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதால் தன்னுடைய ஒரே மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன் உதாரணத்தை உருவாக்கியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி லலிதா.
அரசு ஊழியர்கள் ஏன் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு ஏற்றாற் போல அரசும் இதற்கென தனி ஆணை பிறப்பிக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. வணிகமயமான தனியார் பள்ளியின் கல்வி நிலையங்கள் தரமான கல்வி என்ற பெயரில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
தரமில்லா பாடத்திட்டத்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று காரணம் கூறிக் கொண்ட பெற்றோரும் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் தங்களது குழந்தைகளை தரம் உயர்ந்த தனியார் பள்ளியில் சேர்ப்பது தான் வழக்கம்.
ஆனால் ஐஏஎஸ் அதிகாரியான லலிதா தனது ஒரே மகள் தருணிகாவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார். இதுகுறித்து 'ஒன் இந்தியா தமிழுக்கு' அவர் அளித்த பிரத்யேக தொலைபேசி பேட்டியில் கூறியதாவது.
பொறியியல் பட்டதாரி
என்னுடைய அப்பா ராணுவத்தில் பணியாற்றியதால் நான் ஸ்ரீநகர் முதல் நாகாலந்து வரை அனைத்து கேந்திர வித்யாலயா பள்ளியிலும் படித்துள்ளேன். தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் 2009ல் ஐஏஎஸ் தேர்வு எழுதினேன்.
ஐஏஎஸ் ஆனார்
இதனைத் தொடர்ந்து 2010ல் எனக்கு குடிமைப் பணி கிடைத்தது. 2013 முதல் 2014 வரை சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக பணியாற்றியுள்ளேன். தருணிகா சிசுவாக இருந்த போதே அவரை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
அரசுப் பள்ளியில் மகளுக்கு வித்யாரம்பம்
தற்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும் போதே இதனை செயல்படுத்தியதற்கு என்னுடைய குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் காரணம். சென்னையில் இருக்கும் போது மட்டுமல்ல வேறு எந்த ஊருக்கு இடமாறுதல் பெற்றாலும் அந்த ஊரில் இருக்கும் அரசு அல்லது மாநகராட்சிப் பள்ளியில் தான் என்னுடைய மகளைப் படிக்க வைப்பேன், என்கிறார் லலிதா.
முன்மாதிரி
அரசுப் பள்ளிகள் குறித்து பலரும் தவறான கண்ணோட்டத்தை வைத்திருக்கும் நிலையில் ஐஏஎஸ் பணியில் இருக்கும் அதிகாரி மாநகராட்சிப் பள்ளியில் தனது ஒரே மகளை சேர்த்திருப்பது மற்ற அனைவரின் மனசாட்சியிலும் சாட்டையடி கொடுக்கும் என்பதோடு, இவர் அரசு அதிகாரிகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.