இப்படி பேசினா ஓட்டு கேட்க போக முடியாது... அமித்ஷாவிடம் தமிழிசை புகார்! எச். ராஜாவுக்கு டெல்லி டோஸ்!!
Recommended Video

சென்னை: பெரியார் மீதான எச்.ராஜாவின் விமர்சனம் குறித்து பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் முறையிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. ' பொதுமக்களின் உணர்வுகளுக்கு மாறாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ராஜா. இதனால், கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை.
'பெரியார் சிலைகளை உடைப்பேன்' என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து, தமிழகத்தில் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது. ராஜாவுக்கு எதிராக இன்று காலை முதலே போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ' சிலையில் கையை வைத்தால் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டுவோம்' எனக் கொந்தளித்தார்.

தன்னிலை விளக்கம் தந்த ராஜா
மாநிலம் முழுக்க எதிர்ப்பு வலுப்பெறுவதை உணர்ந்த ராஜா, ' முகநூலில் பெரியாரை பற்றிய கருத்துக்கள் தனது அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. முகநூலை நிர்வகிப்பவர் தமக்கு தெரியாமலே பெரியாரை பற்றிக் குறிப்பிட்டுவிட்டார். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. பெரியாரைப் பற்றிய பதிவினால் யார் மனதும் புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். ஈ.வெ.ரா சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல' என தன்னிலை விளக்கம் அளித்தார்.

ராஜாவை கைது செய்ய கோரிக்கை
திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதையொட்டியே, பெரியார் சிலை தகர்க்கப்படும் என ராஜா கூறினார். 'இந்தக் கருத்துக்காக ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்' எனக் குரல்கள் எழுந்தன.

ராஜா மீது கடும் அதிருப்தி
இந்நிலையில், எந்த விமர்சனத்துக்கும் இதுவரையில் விளக்கம் அளிக்காத ராஜா, பெரியார் சிலை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததன் பின்னணியில் தமிழிசை இருப்பதாகச் சொல்கின்றனர் கமலாலய நிர்வாகிகள். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், " மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே, எதிர்மறையான கருத்துக்களைக் கூறி வருகிறார் ராஜா. ஆண்டாள் விவகாரத்தில் அவர் காட்டிய எதிர்ப்பு என்பது மதம்சார்ந்து பார்க்கப்பட்டது. வைரமுத்து வருத்தம் தெரிவித்தும், அதனை ராஜா ஏற்கவில்லை. பெரியார் குறித்து தொடக்கத்தில் இருந்தே அவர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார். சிலையைத் தகர்ப்போம் என அவர் பேசிய பேச்சால், கடும் கொந்தளிப்பு உருவாகிவிட்டது. அவருடைய கருத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் பலருக்கும் உடன்பாடில்லை.

ராஜாவுக்கு டெல்லி டோஸ்
விவகாரம் வேறு திசையில் செல்வதை உணர்ந்த தமிழிசை, தேசியத் தலைவர் அமித் ஷா கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். அமித் ஷாவிடம் பேசும்போது, ' ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பெரியார் கொள்கைகளை முன்வைத்து இங்கு பல கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பொது உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பேச வேண்டியது கட்டாயம். இப்படி எதிர்மறையாகப் பேசிக் கொண்டிருந்தால், நம்மால் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று சேர முடியாது. வாக்கு சேகரிக்கவும் செல்ல முடியாத நிலை ஏற்படும். ஒரு வார்த்தையால் தேவையற்ற விளைவுகள் ஏற்பட்டுவிட்டன' என விவரித்திருக்கிறார். இதையடுத்து, தேசியத் தலைமையும் ராஜாவை அழைத்துக் கண்டித்தது. இதனை எதிர்பார்க்காத ராஜா, வேறுவழியில்லாமல் ஃபேஸ்புக் அட்மின் மீது பழியைச் சுமத்திவிட்டார்" என்றனர்.












Click it and Unblock the Notifications