ரியல் எஸ்டேட்காரர்கள் காட்டில் மழை தான்.. குறைகிறது பத்திரப்பதிவு நில வழிகாட்டு மதிப்பு!
பத்திரப்பதிவுக்கான நில வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் நில பத்திரப்பதிவு மூலம் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் 33 சதவீதம் வழிகாட்டு மதிப்பை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிலத்தின் மீதான வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் வரை குறைக்க அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நில வழிகாட்டு மதிப்பு கூடுதலாக இருந்ததால் பத்திரப்பதிவு செய்வதில் குறைபாடு ஏற்பட்டது.
குறிப்பாக 2012-13 நிதியாண்டில் 7ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் 2016- 17ம் ஆண்டில் வெறும் ஏழாயிரம் கோடி ரூபாய் மட்டுமே பத்திரப்பதிவு நடந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 -16ல் 25.28 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்ட 20.27 லட்சம் பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
சரியான நில வழிக்காட்டு மதிப்பு இல்லாத காரணத்தால் சராசரியாக சுமார் ஆயிரத்து 500 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது. எனவே வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் நில வழிகாட்டு மதிப்பை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை இதற்கான ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பின்னர் அது அறிவிப்பாக வெளியிடப்படும். அரசின் இந்த முடிவால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விடிவு காலம் ஏற்படும் என்பதோடு சாமான்யர்களும் நிலம் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் துறை வாரியாக வெளியிடப்பட உள்ள அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றது முதல் நடைபெறும் 5வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.