சென்னையில் டிராபிக் விதிமீறுவோரை தண்டிக்க ரூ.6.42 கோடியில் புது திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதல்வர் பழனிசாமி 54 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது 54 புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறைக்கு 45 புதிய அறிவிப்புகளையும், தீயணைப்புத் துறையில் 9 புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். முன்னதாக தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசிய முதல்வர் சரியான ஆதராங்களின்றி எதிர்க்கட்சிகள் தேவையில்லாத புகார்களை அரசு மீது சுமத்துவதாக கூறினார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யாமல் தமிழகத்தை ஜெயலலிதா வழியில் அமைதிப் பூங்காவாக தொடர்ந்து செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார். இதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட 54 புதிய அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
• பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்நிலையம்
• சேலம் கருப்பூர், நாமக்கல் வெப்படை தருமபுரி, கோபிநத்தத்தில் புதிய காவல்நிலையங்கள்
• கோவை தடாகம், ஆத்தூர் நகரம், சுல்தான்பேட்டையிலம் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன
• தமிழ்நாடு காவல்துறையினருக்காக ரூ.3.71 கோடியில் சைபர் அரங்கம்
• சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை தண்டிக்க ரூ.6.42 கோடியில் மின்ரசீது முறை அமல்
• ரூ.2.50 கோடியில் 100 காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
• ரூ.50 லட்சம் செலவில் கையடக்க ஜாமர் சாதனம் வாங்கி பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்
• ரூ.35 லட்சம் செலவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் 2 கருவிகளை வாங்க முடிவு
• ரூ.19 லட்சம் செலவில் அதிரடிப்படை வீரர்களுக்கான குண்டு துளைக்கா 2 பொதியுறைகள் வாங்கப்படும்
• வீரதீர செயலுக்காக பதக்கம் பெறும் காவலர்களுக்கான பணப்படி ரூ.300லிருந்து ரூ.900 ஆக உயர்வு
• கலவரத்தின் போது காவலர்களை தற்காத்துக் கொள்ள ரூ.5 கோடியில் நவீன தற்காப்பு சாதனங்கள்