வழிப்பறி கொள்ளையில் உயிரிழந்த நந்தினியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி!
சென்னை: பட்டினப்பாக்கம் பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி கொள்ளைச் சம்பவத்தின் போது உயிரிழந்த இளம்பெண் நந்தினி மற்றும் சேகர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கை :
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த நந்தினி மற்றும் நஜ்ஜீ ஆகிய இருவரும் ஜூலை 4 அன்று பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தின் போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடையது நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதியதில் சேகர் என்பவர் உயிரிழந்தார்.
நஜ்ஜீ பலத்த காயமடைந்தார். பலத்த காயமடையதுள்ள இவர் பூரண குணம் அடையும் வகையில் உயரிய சிகிச்சை தொடர்ந்து அளித்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நஜ்ஜீக்கு ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது குடித்து விட்டு பலரும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதால் அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று ஒரு வார காலமாக பொதுமக்கள் போராடி வரும் நிலையில் நிதி உதவி அறிவித்துள்ளார் ஜெயலலிதா.