100 நாள் சாதனை மலரை 'ஸ்டாலினிடம்' வழங்கிய எடப்பாடி...ஆனா நீங்க நினைக்கிறது தப்பு!
100 நாள் சாதனை மலரை முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று அளித்தார்.
சென்னை : 100 நாள் சாதனை மலர் வெளியீட்டு விழாவில் திடீரென முதல்வர் பழனிச்சாமி ஸ்டாலினிடம் மலரை அளித்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் இந்த ஸ்டாலின் நீங்கள் நினைக்கும் திமுக செயல் தலைவர் அல்ல, புதிய தலைமுறை செய்தியாளர்.
அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓராண்டை நிறைவு செய்தது, ஆனால் அதை கண்டே கொள்ளவில்லை அரசு. இன்று எடப்பாடி முதல்வராக வந்து 100 நாட்கள் நிறைவடைவதை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
100 நாட்களில் முதல்வர் பழனிச்சாமி செய்த 110 சாதனைகள் பட்டியலிடப்பட்டு இரண்டு பக்க விளம்பரங்களாக அரசு செலவில் அதாவது மக்கள் வரிப்பணத்தில் வீணாக செலவு செய்யப்பட்டு அனைத்து தினசரி பத்திரிக்கைககளிலும் வெளிவந்துள்ளது. இது மட்டுமல்ல இன்று தலைமைச் செயலகத்தில் மலர் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த 100 நாள் சாதனை மலரை முதல்வர் வெளியிட அமைச்சர்கள் பெற்றுக் கொள்ளத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென முதல்வர் பழனிச்சாமி நிகழ்ச்சியை செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை அழைத்து சாதனை மலர், குறும்படங்கள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்பை தினத்தந்தி நிருபர் பென்னட், நியூஸ் 7 தொலைக்காட்சி லாவண்யா மற்றும் புதிய தலைமுறை ஸ்டாலின் ஆகியோரிடம் வழங்கினார்.