உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் - டெல்லியில் தவிக்கும் தமிழக விவசாயிகள்
எங்களின் உயிரைப்பற்றி கவலையில்லை நீதி கிடைக்கும் வரை டெல்லியை விட்டு போகப் போவதில்லை என்று தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நான்கு நாட்களாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் படுத்துறங்கி போராடும் அவர்கள், நீதி கிடைக்கும் வரை 100 நாட்களானாலும் டெல்லியை விட்டு செல்லப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டத்தின் 3வது நாளான நேற்று விவசாயிகள் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளின் போராட்டம் டெல்லிவாசிகளின் கவனத்தை கவர்ந்தாலும் தமிழக எம்.பிக்கள், அரசியல் கட்சித்தலைவர்களின் செவிகளை எட்டவில்லை என்றே கூறவேண்டும்.
மண்டையோடு போராட்டம்
கைகளில் மண்டையோடு, மண் சட்டி, கோவணம் என தமிழக விவசாயிகளின் நூதன போராட்டம் டெல்லி மக்களை சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே. கடுமையான வறட்சியினால் உயிரிழந்த விவசாயிகளை நினைவு கூர்ந்து போராடி வருகின்றனர்.
ஆதிவாசிகளைப் போல
கடந்த 3 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் சாலைகளில் படுத்துக்கொண்டு எந்த வித அடிப்படை வசதிகளுமின்றி போராடி வருகின்றனர்.
ஆதிவாசிகளைப் போல இடுப்பில் இலைதழைகளை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
இரண்டு தினங்களுக்கு முன்பு போராட்டக்காரர்களில் சிலர் தூக்குப் போட முயன்றனர். நேற்று சில விவசாயிகள் தீக்குளிக்கப்போவதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 6 பேரை போலீஸ் உதவி கமிஷனர் வேத் புஷ் மத்திய வேளாண்துறை அமைச்சகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிகாரிகளிடம் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக எம்.பி உறுதி
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, நேற்று போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு அவர்களுடைய கோரிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர்களிடம் பேசுவதாக உறுதி அளித்தார். எனினும் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயங்கும் விவசாயிகள்
வயதான விவசாயிகள் பலர் பட்டினியால் மயங்கி விழுகின்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் மீண்டும் போராட்டத்தை தொடர்கின்றனர். 4வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது.
நாமம் போட்டு போராட்டம்
விவசாயிகள் தங்களின் உடம்பில் நாமம் போட்டும் நெற்றியில் நாமம் போட்டும் போராடி வருகின்றனர். எங்களின் உயிர் போகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே டெல்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.