30 லட்சம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்… நவ.18ல் ரயில் மறியல்
நாகப்பட்டினம்: காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், தூக்கு தண்டனையில் இருந்து 5 மீனவர்களை மீட்காவிட்டால் 18 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல், 5 மீனவர்களையும் மீட்கக்கோரி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அவர்கள் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் முனுசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அரசிடம் முறையிட்டு, 5 மீனவர்களையம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து, மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், வரும் 17ஆம் தேதிக்குள் 5 மீனவர்களையம் மீட்காவிட்டால், 18 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.