மீனவர் பிரச்னை: திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்- சட்டசபையில் காரசார விவாதம்!
தமிழக மீனவர் பிரச்னை குறித்து திமுக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும், படகுகளையும் மீட்பது தொடர்பாக திமுகவின் கே.பி.பி.சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்ட 143 படகுகள் இலங்கை கடலில் மூழ்கும் நிலையில் பாழைடைந்து நிற்கின்றன. மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தொடர் தாக்குதல்களால் அவர்களது குடும்பத்தினர் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சி காலத்தில் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். எங்களைப் போலவே நீங்களும் மீனவர்களையும், படகுகளையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது என்றார்.
மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே 2 முறை பிரதமரை சந்தித்து முதல்வர் இது குறித்து பேசியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவர், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேதமடைந்த படகுகளுக்கு ரூ.90 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.