அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அதை அறிக்கையாக தாக்கல் செய்ய நாளை வரை காலஅவகாசம் அளிக்குமாறும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி உள்ளிட்ட பேனர்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

நீதிமன்றம் விசாரணை
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடுத்த புகார்களை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இன்னும் ஏன் அகற்றவில்லை?
அப்போது தலைமை நீதிபதி, போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாமல் காவல் துறை என்ன செய்துக் கொண்டிருக்கிறது? பேனர்களை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது?

5-ஆம் தேதி அறிக்கை
விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். பேனர்களை அகற்றாதது தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை, மாநகராட்சி வரும் 5-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

தமிழக அரசு பதில்
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றம் செய்துவிட்டதாக தமிழக அரசு பதில் அளித்தது. மேலும் இதை அறிக்கையாக தாக்கல் செய்ய நாளை வரை காலஅவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications