இறக்குமதி மணலை அனுமதிக்க முடியாது... ஹைகோர்ட்டில் அரசு பதில்!
தமிழகத்தில் இறக்குமதி மணலை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை : இறக்குமதி மணலை குவாரி மணலுக்கு மாற்றாக கருத முடியாது என்றும் இறக்குமதி மணலை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இறக்குமதி மணலை விற்க அரசு விதித்த தடையை எதிர்த்து ஆதிமூலம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இறக்குமதி மணலை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது, இறக்குமதி மணலை அனுமதித்தால் தனியார் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத மணல் குவாரிகள் பெருக வழிவகுக்கும்.
மலிவு விலையிலும் இறக்குமதி மணலை விற்க முடியாது. உயர்நீதிமன்றம் குவாரிகளை மூட உத்தரவு பிறப்பித்ததன் விளைவாகவே மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இறக்குமதி மணலை இங்குள்ள குவாரி மணலுக்கு மாற்றாக கருத முடியாது என்றும் அரசு கூறியுள்ளது. அரசு தரப்பு பதிலையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையானது மார்ச் 14க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.