மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் - பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் குவியும் கண்டனங்கள்
தமிழக ஆளுநருக்கு பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிக் கொடுத்த, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இந்திய பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சந்தித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் தருவாயில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார்.
அப்போது ஆளுநரோ நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிக் கொண்டே நிருபரின் கன்னத்தில் தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.
மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை" என கனிமொழி பதிவிட்டுள்ளார்.
அதேபோல, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இந்திய பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஒரு பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநரின் இந்த செயலானது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒப்பானது என்றும் அக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.