நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியானதும் தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை-ஆளுநர்
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
Recommended Video
சென்னை : அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழக ஆளுநர் இன்று அவசரமாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் 19 நிமிட ஆடியோ தமிழக உயர்கல்வித்துறையை ஆட்டம் காண வைத்திருக்கிறது. நன்றாக படிக்கும் 4 மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மதிப்பெண் மற்றும் பண ஆசை காட்டி உயர்அதிகாரிகளுடன் படுக்கைக்கு அழைத்திருந்தார் நிர்மலா தேவி.
அதிர்ச்சியடைந்த மாணவிகள் நிர்மலா தேவியிடம் இது பற்றி இனி பேச வேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து மாணவிகளை வற்புறுத்துகிறார். உயர் படிப்பு படிக்க வேண்டுமா, டிஎன்பிஎஸ்சி படிக்க வேண்டுமா அனைத்திற்கும் நான் உதவுகிறேன். உங்களுக்கு படிப்பிலும் நல்ல எதிர்காலம் கிடைக்கும், மாத வருமானமும் உண்டு என்று மாணவிகளை மூளைச் சலவை செய்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரம் பூதாகரமானது
ஆனால் இதற்கெல்லாம் மசியவில்லை மாணவிகள், மாணவிகளுடன் நிர்மலா தேவி நடத்திய உரையாடல் ஆடியோ லீக் ஆனதால் பிரச்னை பூதாகரமானது. உயர்கல்வித்துறையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் பகீர் தகவல்களை வெளியிடுகின்றனர். ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகளை அவர்களின் கைடுகள், ஆய்வுக்காக செல்லாம் என்று வெளியூர்களுக்கு அழைத்து செல்வதாகவும், இதனால் கெய்டுகள் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளதாகவும் மாணவிகள் கூறுகின்றனர்.
யார் அந்த கருப்பு ஆடுகள்?
பேராசிரியை நிர்மலா மாணவிகளிடம் உரையாடும் போது தனக்கு உயர் அதிகாரிகளின் செல்வாக்கு இருக்கிறது, தான் நினைத்தால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் நிகழ்ச்சியின் போது ஆளுநர் மேடைக்கு மிக அருகில் தான் இருந்ததையும் நிர்மலா சுட்டிக்காட்டி இருந்தார்.
நிர்மலாவிடம் விசாரணை
நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை கண்டறிய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் நிர்மலா தேவி நேற்று அவருடைய வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சென்னையில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தமிழக ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
என்ன சொல்லப்போகிறார் ஆளுநர்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் விசாரணை முடிந்து அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.