பீட்டா வழக்கால் நாட்டு நாய் கருத்தரிப்பு மையத்தை மூட ஹைகோர்ட் உத்தரவு- தமிழக அரசு அப்பீல்!
பீட்டா தொடர்ந்த வழக்கால் சென்னை நாட்டு நாய் கருத்தரிப்பு மையத்தை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை: சர்ச்சைக்குரிய வெளிநாட்டு அமைப்பான பீட்டா தொடர்ந்தால் தமிழக நாட்டு நாய்கள் கருத்தரிப்பு மையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தின் பூர்வீக நாய் இனங்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாய்களின் இனத்தை பாதுகாக்கவும், அந்த நாய்களின் இனத்தை பெருக்கவும் சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இன விருத்தி மையத்தை 1980-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடைத்துறை தொடங்கியது.
சைதாப்பேட்டை இன விருத்தி மையத்தில் சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட நாட்டு நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு நாய்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் பீட்டா, விலங்குகள் நலம் வாரியம் இங்கு உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி வழக்கு தொடர்ந்தன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நாய்கள் இனவிருத்தி மையத்தில் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என விலங்குகள் நல வாரியம் பழைய பல்லவியை பாடியது.
இதையடுத்து நாய்கள் இனவிருத்தி மையத்தை 2 மாதத்தில் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஜல்லிக்கட்டு புரட்சியால் நாட்டு நாய்கள், நாட்டு மாடுகள் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
மக்களின் கவனமும் நாட்டு நாய்கள், நாட்டு மாடுகள் மீது திரும்பியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.