ராமதாஸ், அன்புமணி பாதுகாப்புக்கு.. 24 மணி நேரத்துக்கும் இரண்டே போலீஸாரை நியமித்த தமிழக அரசு!!
உயர்நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி ஒரு வழக்குப் போட்டிருந்தார். அதில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தமிழக அரசு வாபஸ் பெற்றுவிட்டது. எனவே, மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், மகாதேவன் ஆகியோர் விசாரித்து, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு ஆயுதம் தாங்கிய தலா 2 போலீஸ்காரர்கள் மூலம் 24 மணி நேரமும் தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழக காவல்துறை சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு தலா ஒரு போலீஸ்காரரை கொண்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று புகார் கூறினார்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை கூறுகையில், ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாம் என்று அரசு முடிவு எடுத்தது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, 2 போலீஸ்காரர்கள் வீதம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்களின் பெயர் விவரங்களை இந்த கோர்ட்டில் அரசு வக்கீல் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விழுப்புரம் துணை போலீஸ் கண்காணிப்பாளர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
2 பேர்னா..வெறும் 2 பேர்தானா...!!
அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ஒரே நேரத்தில் 2 போலீஸ்காரர்கள் வீதம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். அப்படியென்றால், போலீஸ்காரர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று கணக்கிட்டால், 6 போலீஸ்காரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் 24 மணி நேரத்துக்கும் 2 போலீஸ்காரர்களை கொண்டு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் இன்பதுரை, 2 ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்களை கொண்டு 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படிதான், நாங்கள் பாதுகாப்பு வழங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 2 போலீஸ்காரர்கள் வீதம் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றால், அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.