எம்.ஜி.ஆர் பெயரில் இதைச் செய்திருந்தால் மழையே இறங்கி வந்து நன்றி சொல்லியிருக்குமே!
சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஊர் ஊராக கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதற்குப் பதில் அதற்காகும் செலவை இந்த மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் உருப்படியாக செலவிட்டிருக்கலாம்.
மழை நீர் சேகரிப்பு தொட்டி வைத்தால் தான் நம் ஊரில் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. ஒரு வீடு புதிதாக இப்போது காட்டினால் நாம் அந்த மழை நீர் சேகரிக்கும் தொட்டியை அமைத்து புகைப்படம் எடுத்து கொடுத்தால்தான் இணைப்பு கிடைக்கும். அந்த அளவுக்கு மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது அரசு.
ஏற்கனவே கட்டிய வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு வசதி செய்ய வேண்டும். மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இதில் அவர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து இந்தத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
தூர் வாராத காரணத்தால் வீண்
இப்படி வீடுகளில் எல்லாம் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த கவனம் காட்டிய அரசு நாட்டில் பெருமழையாக பெய்யும் மழை நீரை சேகரிக்க சரியான நடவடிக்கை எடுக்க தவறி விட்டது என்பதுதான் கசப்பான உண்மையாகும். கடந்த 2015ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைப் பார்த்தோம். அத்தனை தண்ணீரும் வீணாகத்தான் போனது. காலா காலத்தில குளங்கள், ஏரி போன்றவற்றை அடிக்கடி தூர் வாரி இருக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா. இதில் மழை நீரைத் தேக்கி வைக்க வேண்டிய ஏரிகள் சில பேரின் அதிகார ஆக்கிரமிப்பால் வீடுகளாக மாறி இருப்பது இயற்கைக்கு நாம் செய்த துரோகம். அதனால் இப்போது பாதகம் இங்கு வாழும் மக்களுக்குத் தான் .
ஆக்கிரமிப்பால் காணாமல் போன ஏரிகள்
எத்தனையோ ஏரி, குளங்கள் கலப்படமான நீரோடு இன்று நம் கண் முன். அத்தனை அசிங்கங்களையும் நாமே செய்கிறோம். எத்தனையோ ஏரி, குளங்கள் நம் கண்ணுக்கு தெரியாமலே காணாமல் போய் விட்டன. அந்த ஆக்கிரமிப்புகளையும் நாமே செய்கிறோம். நம் வருங்கால சந்ததியினருக்கு அழுக்கு நீரையும் அழுக்கு சமுதாயத்தையும் தான் நாம் இனி விட்டு செல்லப் போகிறோம்.
மனம் குளிர வைத்த மன்னர்கள்
அக்காலத்திலே மன்னர்கள் குளமும் கோவிலுமாக கட்டி கட்டி மழை நீரை குளத்தில் தேக்கி வைத்து கும்பிட கோவிலும் கட்டி தந்து மக்களை மனம் குளிர வைத்தார்கள். இப்போதைய அரசு அந்த காலத்து மன்னர்கள் மாதிரி புதிதாக குளம் கட்டி தராவிட்டாலும் கூட ஏற்கனவே இருக்கிற ஏரி குளங்களை வருடம் ஒரு முறை அல்லது இரு முறை தூர் வாரும் நடவடிக்கைளில் கவனம் செலுத்தலாமே.
எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்தி
ஏன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு செலவிடப்படும் பல கோடி பணத்தை அந்த எம்.ஜி.ஆர் பேரில் நாற்பது குளம் வெட்டியிருக்கலாம். நாற்பது ஏரிகளை தூர் வார தொடங்கி இருக்கலாம். நாற்பது சாலைகளை சரி செய்திருக்கலாம். ரோட்டின் குண்டு குழியை சரி செய்திருக்கலாம். எல்லாவற்றிக்கும் அவர் பெயரையும் வைத்திருக்கலாம். அது அல்லவா அவருக்கு செய்யும் சிறப்பு. கோடிகளை செலவு செய்து மட்டும் அல்ல கொடிகள் பிடித்து மரியாதை செய்வது மட்டும் எம் .ஜி. ஆர் அவர்களுக்கு அரசு செய்யும் மரியாதை ஆகி விடாது.
இப்படிச் செய்தால்தான் மரியாதை
இது போல அவர் பெயரில் செய்யப்படும் நற்பணிகளே அவர் பெயரை இன்னும் பல நூறு ஆண்டு இருக்க செய்திருக்கும். கோடிகளை செலவு செய்து மட்டும் அல்ல கொடிகள் பிடித்து கூட்டங்கள் நடத்துவது மட்டும் அல்ல அரசாங்கம் .மக்களுக்காக கூடி யோசிக்க வேண்டும். மக்களுக்காக திட்டங்கள் தீட்ட வேண்டும். ., மக்களுக்காக கோடிகளை செலவிட வேண்டும்.. அதுதான் மக்களின் அரசாக இருக்க முடியும்.
- Inkpena சஹாயா