ஆந்திரா சிறையில் தமிழர்கள்... ஜாமீன் எடுப்பதில் அ.தி.மு.க.- தி.மு.க. மும்முர மோதல்!
சென்னை: செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திரா சிறையில் வாடும் தமிழர்களை திடீரென ஜாமீனில் எடுப்பதில் தமிழக அரசும் தி.மு.க.வும் மும்முரமாக முட்டி மோதி வருகின்றன.
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் செம்மரங்களை கடத்தியதாக ஆந்திராவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இருப்பினும் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு, நிதி உதவி மட்டுமே அளித்த தமிழக அரசு சிறையில்வாடும் தமிழர்கள் குறித்து மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில் அண்மையில் திடீரென ஆந்திரா சிறையில் வாடும் 516 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
கருணாநிதி விமர்சனம்
இந்த கடிதத்தை முன்வைத்து தி.மு.க. படுவேகமாக அரசியல் காய்களை நகர்த்தியது. இக்கடிதம் குறித்து கருத்து தெரிவித்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, இது காலம் கடந்த நடவடிக்கை என விமர்சித்திருந்தார்.
ஸ்டாலின் சந்திப்பு
இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் செம்மரக் கடத்தல் வழக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஒரு உரையாடலை நடத்தினார். அதில் கண்ணீர் மல்க தங்களது பிரச்சனைகளை பாதிக்கப்பட்டோர் ஸ்டாலினிடம் கூறியிருந்தனர்.
கருணாநிதி அதிரடி அறிவிப்பு
இதன் பின்னர் மறுநாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை மீட்பதற்கான பணியில் தி.மு.க. வழக்கறிஞர்கள் ஈடுபட வேண்டும் என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தமிழக அரசு பதிலடி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு பதிலடியாக தமிழக அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரா தமிழர்களை மீட்க தமிழக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டது என்ன என்பதை விளக்கி இதுவரை 172 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்; இன்னமும் 344 தமிழர்கள் சிறையில் இருக்கின்றனர் என்று கூறியதுடன் 2 அரசு வழக்கறிஞர்கள் தலைமையில் வழக்கறிஞர்கள் குழு ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து எஞ்சிய தமிழர்களையும் விடுவிப்பார்கள்.. இதற்காக ரூ8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
தி.மு.க. வழக்கறிஞர்கள் களத்தில் இறங்குவார்கள் என்ற அறிவிப்பு வெளியான பின்னர் தமிழக அரசு, நாங்கள் ஏற்கெனவே ஜாமீனில் 172 பேரை எடுத்துவிட்டோம்; எஞ்சியோரை ஜாமீனில் எடுக்கப் போகிறோம் என கூறியிருக்கிறது. இந்த 172 தமிழர்கள் ஜாமீனில் விடுதலையானதை முன்னரே தமிழக அரசு ஏன் தெரிவிக்காமல் மவுனம் காத்தது என்பதற்கு விடை ஏதும் இல்லை.
தேர்தல் ஆதாயம்
சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.. தமிழக மீனவர் பிரச்சனை, ஆந்திரா தமிழர் பிரச்சனை என கையில் கிடைக்கிற அனைத்தையும் தேர்தல் ஆதாயப் பொருளாக்கி வாக்கு வங்கியாகப் பார்த்து வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள்...
ஆளும் கட்சிக்கு எந்த நற்பெயரும் வந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகளும் எதிர்க்கட்சிகளுக்கு இம்மியளவும் இடம்கொடுத்துவிடக் கூடாது என ஆளும் கட்சியும் கங்கணம் கட்டிக் கொண்டு களமாடிக் கொள்ளட்டும்.. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மீண்டும் பாதிப்பு வராமல் அது இருக்கட்டும்!