மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கான கொள்முதல் கட்டணம் உயருகிறது- குஷியோ குஷியில் ‘கோட்டை’
டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானங்களை கொள்முதல் செய்யும் கட்டணத்தையும் உயர்த்துகிறது தமிழக அரசு.
சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானங்களை கொள்முதல் செய்யும் கட்டணத்தையும் உயர்த்துகிறது தமிழக அரசு. இந்த விலை உயர்வால் கோட்டை வட்டாரத்தினர் ரொம்பவே குஷியாக இருக்கிறார்களாம்.
தமிழக அரசு அண்மையில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை கடுமையாக உயர்த்தியது. அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரித்ததால் செலவை ஈடுகட்டும் வகையில்தான் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வால் அரசு கஜானா நிரம்பும்; கூடுதல் விலைக்கு விற்பதால் டாஸ்மாக் தொடர்புடையோரும் ஆதாயம் அடைகின்றனர்.
கொள்ளை லாபம்
ஆனால் ஆட்சியாளர்களுக்கு வருவாய் என்பது மதுபான நிறுவனங்களிடம் இருந்து வரும் கணிசமான கப்பம்தான். மதுபான நிறுவனங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே கொள்ளை லாபம் சம்பாத்தித்துதான் வருகின்றன.
ஐடியா தந்த நிறுவனங்கள்
தற்போது அனைத்து மதுபானங்களுக்குமே ஜிஎஸ்டி வரியும்விதிக்கப்படலாம் என்பதால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவியுங்கள்.. உங்களுக்கான தொகையை அதில் இருந்து கணிசமாக எடுத்துக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளன மதுபான தயாரிப்பு நிறுவனங்கள்.
விரைவில் அறிவிப்பு
இதையேற்று ஆட்சியாளர்களும் கூடி விவாதித்திருக்கின்றனர். கடைசியாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
கஜானா பணம் கல்லாபெட்டியில்
அதாவது ஒரு குவார்ட்டர் பிராந்தி அல்லது விஸ்கி தயாரிப்புக்கு மதுபான நிறுவனங்களுக்கான செலவு என்பது அதிகபட்சம் ரூ15 வரைதானாம். ஆனால் ஏற்கனவே தமிழக அரசு இரு மடங்கு விலை கொடுத்து வாங்கி அதற்கு மேல் இரு மடங்கு விலை வைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்கிறது. தற்போது கொள்முதல் விலையை ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ15 என உயர்த்தினால் ரூ5 மதுபான நிறுவனங்களுக்கும் ரூ10 ஆட்சியாளர்களுக்கு என பங்கு போகுமாம். அதாவது நமது கஜானாவில் உள்ள பணத்தை மதுபான நிறுவனங்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து ஆட்சியாளர்களின் கல்லாபெட்டிகள் நிரம்பப் போகின்றன. இதனால் கோட்டை வட்டாரத்தினர் ரொம்பவே குஷியில் இருக்கிறார்களாம்.