தலித் இளைஞர் சங்கர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5.62 லட்சம் நிதியுதவி
உடுமலைப்பைட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5.62 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பொறியியல் படித்துள்ள அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார்.
இந்தத் திருமணத்திற்கு கவுசல்யாவின் வீட்டார் சம்மதிக்கவில்லை. கடுமையாக எதிர்த்துள்ளனர். அதையும் மீறி திருமணம் செய்து கொண்டனர் சங்கர் - கவுசல்யா. இதையடுத்து இருவரையும் பிரிக்க கவுசல்யா வீட்டுத் தரப்பு தொடர்ந்து முயன்று வந்தது. தற்போது அது வெறித்தனமான கொலையில் போய் முடிந்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் பலர் பார்க்க சங்கரை கொடூரமாகக் கொலை செய்து தப்பிச் சென்றது 3 பேர் கொண்ட கொலைக் கும்பல். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரின் உடல் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சங்கரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் சாதனைக்குரல், சங்கரின் தந்தை வேலுச்சாமியை நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து நேரில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.
அப்போது கவுசல்யாவின் உயிரைக் காக்க தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கோட்டாட்சியரிடம் வேலுச்சாமி கேட்டுக் கொண்டார். மேலும் தனது மகனை இழந்து விட்டதால் தனது குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.