சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால் உண்மை வெளிவந்துவிடும் என அரசுக்கு தயக்கம்: ராமதாஸ்
சென்னை: பேரவைத் தலைவர்களாக இருப்பவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தலைவர்; பொதுவானவர் என்ற நிலையிலிருந்து இறங்கி, தங்கள் தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுபவர்களாகிவிட்டனர். பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் இந்த உண்மைகள் அனைத்தும் வெளி வந்துவிடும் என்பதே ஆட்சியாளர்களின் தயக்கத்துக்குக் காரணம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி சட்டப்பேரவைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வினா எழுப்பியிருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் முழுமையாக பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் பேரவை நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தொலைக்காட்சிக்கு வழங்கப்படும் தொகுப்பில் அரசு ஆதரவு பேச்சுக்கள் மட்டுமே இடம் பெறும்; அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இடம் பெறாது. இது சட்டப்பேரவை நடவடிக்கைகளின் உண்மை நிலையை பிரதிபலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப் பேரவையில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. பேரவைத் தலைவர்களாக இருப்பவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தலைவர்; பொதுவானவர் என்ற நிலையிலிருந்து இறங்கி, தங்கள் தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுபவர்களாகிவிட்டனர்.
பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் இந்த உண்மைகள் அனைத்தும் வெளி வந்துவிடும் என்பதே ஆட்சியாளர்களின் தயக்கத்துக்குக் காரணம்.
மக்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. ஆந்திரா, கேரளா ஆகிய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்படுகின்றன. கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் எந்தவித வெட்டும் செய்யப்படாமல் அப்படியே தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழகம் மட்டும் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பத் தயங்குவது சரியல்ல.
பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை நேரலையில் ஒளிபரப்ப கூடுதலாக ஏற்படும் செலவு பெரிய அளவில் இருக்காது. அதேநேரத்தில் பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பபட்டால் அவையில் நடப்பதை மக்களால் தெரிந்து கொள்ள முடியும்; உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்பன உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படும். எனவே, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அரசும், பேரவைச் செயலகமும் முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.