தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது?
சென்னை: டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012ஆம் ஆண்டு மிகக் கடுமையாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ46.50 ஆக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகாலமாக தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மொத்தம் ரூ15.14 அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ளது.
இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பையும் தமிழக அரசுதான் ஏற்றுக் கொண்டு இருக்கிறது. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ61.64. தொடர்ச்சியான டீசல் விலை உயர்வை காரணம் காட்டி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டன.
ஆனால் தமிழகத்தில் மட்டும் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்படி கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாததால் ஆண்டுக்கு ரூ5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என்கிறது போக்குவரத்து கழகங்களின் தரப்பு.
இதற்காகவே தமிழக அரசு தற்போது பேருந்து கட்டணங்களை உயர்த்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.