கொசுத் தொல்லையால் தத்தளிக்கும் மக்களே.. அமைச்சர் சொல்லும் நல்ல சேதியைக் கேளுங்க!
சென்னை: தமிழகம் முழுவதும் நாடு, நகரம், காடு, கரையென பாரபட்சம் பார்க்காமல் கடித்துக் குதறும் கொசுக்களிடம் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அதாவது தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இதை மட்டும் தமிழக அரசு செய்தால், கொசுக்கடியால் கடும் கடுப்பாகிக் கிடக்கும் தமிழக மக்கள் அரசுக்கு நன்றி கூறி மகிழ்வார்கள்.
உண்மையிலேயே தமிழகத்தை வாட்டி வதைக்கும் பெரிய பிரச்சினை மின்சாரப் பிரச்சினை கிடையாது.. கொசுத் தொல்லைதான். குறிப்பாக தலைநகர் சென்னையில் கொசுத் தொல்லை பயங்கரமாக இருக்கிறது.
பேட்டும் கையுமாக
மாலை ஆகி விட்டால் போதும் வீ்ட்டுக்கு வீடு கொசு பேட்களின் பட் படார் சத்தம்தான் அதிகம் கேட்கிறது. மாலை முதல் இரவு தூங்கப் போகும் வரை பேட்டை கீழே வைக்க முடியவில்லை.
விதம் விதமாக கடிக்கும் கொசுக்கள்
எத்தனைதான் பேட்டால் வேட்டையாடினாலும் கொசுக்கள் ஓய்வதாக இல்லை. விதம் விதமாக வந்து கடிக்கின்றன. காதுகளுக்குள் ரீங்காரமிடுகின்றன. மூக்கைக் குறி வைத்து கடிக்கின்றன. பறவைகள் போல கண் முன்பாக படபடத்துப் பறக்கின்றன. காலைக் குதறுகி்ன்றன.
ரத்த வெள்ளத்தில் தூங்கும் மக்கள்
படுக்கை முழுவதும் ரத்தக் கறையாக இருக்கிறது காலையில் எழுந்து பார்க்கும்போது. அவ்வளவு கொசுக்கடி. என்ன செய்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை.
தமிழகம் முழுவதும் இதை கடிதான்
தமிழகம் முழுவதுமே கொசுத் தொல்லை பரவலாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்பெல்லாம் மழைக்காலம், குளிர்காலத்தில்தான் கொசுக்கள் அதிகமாக இருக்கும். தற்போது வெயில் வெளுத்து வரும் நிலையிலும் கட தமிழகத்தில் கொசுத் தொல்லை ஓயாமல் இருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சட்டசபையில் கொசு
இந்த நிலையில் இன்று சட்டசபையில் கொசுத் தொல்லை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானமே கொண்டு வரப்பட்டது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்தார். அவர் பேசியதாவது...
துரிதமாக செயல்படும் அரசு
தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. கொசுக்களின் 4 பருவங்களிலும் அதை அழிப்பதற்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
காய்ச்சல் குறைந்து விட்டது
அரசின் இந்த நடவடிக்கையால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
ஜனவரி மதாம் தினசரி 6000 பேருக்கு கொசுக் காய்ச்சல்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தினமும் 6 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்றனர். ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் தினமும் 2,500 பேர்தான் சிகிச்சை பெறுகிறார்கள்.
கொசுவால் பரவும் வியாதிகள் குறைவு
கொசுக்களால் பரவும் நோய்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களே பீதி வேண்டாம்
கொசு ஒழிப்பும் தீவிரமாக நடக்கிறது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.