வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மழை பெய்யுமாம்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அண்மையில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அது வியாழக்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
வரும் நாட்களில் அது மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு இரவில் உறைபனி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் முதல்வாரத்தில் இருந்து இதுவரை பல காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. மாதி புயலும் உருவானது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்திற்கு சரியான அளவிற்கு கிடைக்கவில்லை. கடந்த 15 நாட்களாகவே பனி கொட்டத் தொடங்கிவிட்டதால் நீராதாரமும் குறைந்து வருகிறது. இனியாவது மழை பெய்யுமா? என்று ஏங்கத் தொடங்கியுள்ளனர் சென்னைவாசிகள்.