சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது?
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எந்த நேரத்திலும் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: சேகர் ரெட்டியுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா மற்றும் சேகர் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்ட சட்டவிரோத பணி பரிமாற்ற ஆவணங்கள், சுகாதாரத் துறை அமைச்சக ஊழல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் கட்டமாக ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆஜராக விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை ஏற்று விஜயபாஸ்கர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரணை நடைபெற்றது.
அதேநேரத்தில் சேகர் ரெட்டியுடன் இணைந்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் கைது செய்யப்படும் நிலையில் அவர் உடனே அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.