இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தேர்தல் முறைகேடு..: சொல்வது அமித்ஷா
கோவை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தேர்தல் காலத்தில் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுகிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
கோவையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. தேசிய அளவில் 10 கோடி உறுப்பினர் சேர்க்க திட்டமிடப்பட்டது.
அதில் 6.20 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இது 60 சதவீதம் ஆகும். மீதமுள்ள 40 சதவீதத்தை வருகிற 31-ந்தேதிக்குள் சேர்க்க வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கை என்பதை தீவிர உறுப்பினர் சேர்க்கையாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் 100 புதிய உறுப்பினர்களை இந்த மாதத்துக்குள் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் இலக்கை எளிதில் எட்டலாம்.
உறுப்பினர் சேர்க்கைக்கு 53 ஆயிரம் விண்ணப்ப புத்தகங்கள் வினியோகித்தோம். அதில் 12 ஆயிரம் புத்தகங்கள் உறுப்பினர் சேர்க்கப்பட்டு திரும்ப வந்துள்ளது. மீதியுள்ள புத்தகங்களையும் நிரப்பி உறுப்பினர்களை சேர்த்து அனுப்ப வேண்டுகிறேன்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் 19 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். வருகிற 31-ந்தேதிக்குள் 24 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
6.20 கோடி உறுப்பினர்களில் 8 முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் கொடுத்து தானாக முன்வந்து சேர்ந்துள்ளனர். எனவே 24 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது என்பது எளிதானதுதான்.
தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வலிமையாக்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் நான் பார்த்ததில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில்தான் தேர்தல் நேரத்தில் அதிக ஊழல் நடக்கிறது. இதனை முறியடிக்க பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும்.
நாம் 31-ந்தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்ட வேண்டும். இதற்காக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். கடந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு 17 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் 282 எம்.பி.க்கள் நமக்கு கிடைத்துள்ளர். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதன் மூலம் அடுத்த தேர்தலில் 300 எம்.பி. இடங்களை பிடிக்க முடியும்.
ஒரு வீட்டில் ஒருவர் உறுப்பினரானால் அதன் மூலம் 3 ஓட்டு கிடைக்கும். அதன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை 30 கோடியாக மாற்றலாம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.