டெங்குவை கட்டுப்படுத்த ரூ256 கோடி தேவை- மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை
டெங்குவை கட்டுப்படுத்த ரூ256 கோடி நிதி உதவி கேட்கிறது தமிழக அரசு.
சென்னை: டெங்குவைக் கட்டுப்படுத்த ரூ256 கோடி நிதி உதவி தேவை என மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 10 முதல் 15 பேர் வரை பலியாகி வருகின்றனர்.
இதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.
இக்குழுவினருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, டெங்குவை கட்டுப்படுத்த ரூ256 கோடி நிதி தேவை என மத்திய குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தியது.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மத்திய குழு தமிழகத்தில் 3 நாட்கள் ஆய்வு நடத்தும். சென்னை அரசு மருத்துவமனை மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் இக்குழு ஆய்வு நடத்தும். மத்திய குழு அளித்துள்ள ஆலோசனைகளை செயல்படுத்துவோம் என்றார்.