பட்டாசுக்கு 28% வரி கூடாது.. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிரச்சினை கிளப்புவோம்: ஜெயக்குமார்
சென்னை: ஜிஎஸ்டி வரி பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ஜெயக்குமார். அப்போது அவரிடம் பட்டாசு தொழிலாளர்கள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 10 லட்சம் பேர் பட்டாசு தொழிலை நம்பியுள்ளனர். பட்டாசுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் பட்டாசு தொழில் பாதிக்கப்படும்.
இது அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும். இதுகுறித்து மத்திய அரசுக்கு நாங்கள் ஏற்கனவே அழுத்தம் கொடுத்தோம். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதுபற்றி கூறுகையில், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகும் அளவுக்கு நியாயமான காரணத்தை கூறினால், அதுகுறித்து பரிசீலனை செய்வோம் என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பது முடிந்த கதையல்ல. கவுன்சிலின் தலைவராக உள்ளவர் நிதி அமைச்சர். ஒவ்வொரு மாதமும் முதல், சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் கூடும். அப்போது மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறினால், அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும். எனவே எந்த மக்களும் பாதிப்படைய மாட்டார்கள். அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும். அப்போது, விருதுநகர் மாவட்ட, பட்டாசு பிரச்சினையை கிளப்புவோம். தீபாவளி வரைகூட காத்திருக்க தேவையில்லை. இவ்வாறு நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications