இடைத்தேர்தல்: காங்கிரஸ் புறக்கணிப்பு; களத்தில் அதிமுக, பாஜக, கம்யூனிஸ்டுகள்
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஞானதேசிகன் இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் காலியாக இருந்து வரும் நெல்லை, தூத்துக்குடி, கோவை மேயர் பதவிகள், அரக்கோணம், விருத்தாச்சலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன் கோவில் நகராட்சி தலைவர் பதவிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக, நகர்ப்புற வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கவுள்ளது.
கடந்த வாரம் தொடங்கிய இதற்கான வேட்புமனுத்தாக்கல், வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டிக்களத்தில் இருந்து விலகி வருகின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மேயர் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுக பிரமுகர்கள் பட்டியலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
திமுக விலகல்
ஆனால், கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் கட்சியுடன் மோதிய முக்கிய எதிர்க்கட்சியான திமுக இம்முறை போட்டியிலிருந்து விலகிவிட்டது. தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்று அதற்கான விளக்கத்தையும் திமுக அளித்துள்ளது.
மதிமுக புறக்கணிப்பு
மதிமுக-வும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. பாமக தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னதாகவே அறிவித்து விட்டார். "உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடப்போவதில்லை என தேமுதிகவும் அறிவித்துவிட்டது.
பாஜகவிற்கு ஆதரவு
அதேசமயம், மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவு தரும் நிலையை எடுத்துள்ளன.
உதிரிக்கட்சிகள்
அதேபோல தமுமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
களமிறங்கிய பாஜக
இந்நிலையில், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்து கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் பாஜக, முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது.
தங்களது தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைமைகளை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.
கம்யூனிஸ்டுகள்
இதுபோல், இடதுசாரிகளும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கோவை மேயர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இ.கம்யூனிஸ்ட் போட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியனிடம் கேட்டபோது, "எங்களிடம் ஆலோசனை செய்யாமலே மார்க்சிஸ்ட் கட்சியினர் வேட்பாளரை அறிவித்துவிட்டனர். இருந்தபோதிலும் எங்களுக்கிடையே பிரச்சினை வராமல் இருப்பதற்காக அதை பெரிதாகக் கருதவில்லை. நாங்களும் தேர்தலில் போட்டியிடுகிறோம். மார்க்சிஸ்ட் போட்டியிடாத இடங்களில் நாங்கள் போட்டியிடுவது உறுதி" என்றார்.
காங்கிரஸ் விலகல்
மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என திடீரென அறிவித்துள்ளது. தலைமையிடம் இருந்து வரும் தகவலுக்காக காத்திருந்து காத்திருந்து கடைசியில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளது.
அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட்டுகள்
இந்த உள்ளாட்சித் தேர்தலை கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக பாஜக, இடதுசாரிகள் போன்ற தேசியக் கட்சிகள் நினைக்கின்றன. அதனால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் முழுவீச்சில் களமிறங்குகின்றன.