ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளராக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா இடைத் தேர்தல் ஜூலை 3ந் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்வகணபதி, தற்போது தி.மு.கவில் உள்ளார். இவர் 2010ம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் ஊழல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனால் அவர் தன் ராஜ்யசபா எம்.பி பதவியை கடந்த ஏப்ரல் 18ந் தேதி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அப் பதவிக்கு ஜுலை 3-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று நள்ளிரவில் அதிமுக வேட்பாளராக நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நவநீதகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார்.